Saturday 8 March 2014

அர்விந்த் கேஜ்ரிவாலின் மோடிக்கான 17 கேள்விகள் (தமிழில்) - நரேன் ராஜகோபாலன்

Arvind Kejriwal will be administered the oath of office, along with six cabinet ministers, at the Ramlila Maidan.

1) மத்திய அரசு கே.ஜி. பேசினின் இயற்கை எரிவாயுவின் விலையை அலகுக்கு $16 என்று உயர்த்த உள்ளதா ? நீங்கள் பிரதமரானால் இதன் விலையை $16க்கு உயர்த்துவீர்களா ?

2) டெண்டர்களை கோராமல், குஜராத் அரசு சூரிய சக்தி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.13 கொடுத்து வாங்குகிறதா ? மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடாகாவிலும் இதே சூரிய ஒளி மின்சாரம் முறையே ரூ.7.5 & ரூ.5.5க்கு டெண்டர்களின் மூலம் வாங்கும்போது, ஏன் உங்களுடைய அரசு அதிக விலைக்கு இதை வாங்குகிறது ?

3) நீங்கள் குஜராத்தில் விவசாயத்தின் வளர்ச்சி 11% என்று சொன்னீர்கள். ஆனால் உங்களுடைய அரசின் தகவல்கள் 2006-07இல் 27,815 கோடிகள் என்றும், 2012-13-இல் 25,908 கோடிகளாக குறைந்தது என்றும் சொல்லியிருக்கிறது. இதை கணக்கெடுத்தால் உங்களுடைய ஆட்சிக்காலத்தில் நியாயமாக குஜராத்தின் விவசாய வளர்ச்சி -1.18% குறைந்திருக்கிறது. இதில் எங்கிருந்து 11% வளர்ச்சி என்று பறைசாற்றுகிறீர்கள் ?

4) கடந்த பத்தாண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறுதொழில்கள் குஜராத்தில் மூடப்பட்டிருக்கின்றன. மிக சிறிய ஊரான மெஹசனாவிலேயே 187 சிறுதொழில் நிறுவனங்களில் 140 நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில், எதை நீங்கள் வளர்ச்சிக்கான மாடல் என்று முன்னிறுத்துகிறீர்கள் ? இது தான் உங்களின் மாடல் என்றால், இந்தியாவின் சிறுதொழில்களை இருட்டடிப்பு செய்து விட்டு, மூடி விட்டு அத்தனையையும் தூக்கி உங்களுக்கு பரிச்சயமான பெருநிறுவனங்களுக்கு கொடுப்பீர்களா ?

5) நீங்கள் மார் தட்டிக் கொள்வது குஜராத்தில் லஞ்சமோ ஊழலோ இல்லை என்பது. பல்வேறு சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் இருக்கும் அரசு அலுவலங்களில் ஊழலும், லஞ்சமும் ஆறாய் ஒடுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழேயான ரேஷன் கார்டுகள், அரசு திட்டங்கள், லைசன்ஸ்கள் வாங்க லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. எதை வைத்துக் கொண்டு குஜராத் ஊழலற்ற மாநிலம் என்று ஊர் முழுக்க சொல்லுகிறீர்கள் ?

6) நிதி சார்ந்த மோசடிகளில் உங்கள் அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் உடன்பட்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. ஆறு கோடி குஜராத்தி மக்கள்தொகையில் நேர்மையான ஆட்களே இல்லையா ?

7) உங்களுக்கும் முகேஷ் அம்பானிக்குமான தொடர்ப்பினைப் பற்றி உங்களால் வரையறுக்க முடியுமா ?

8) 1,500 இடங்கள் இருக்கும் குஜராத் அரசின் ஜூனியர் லெவல் வேலைக்கு 13 இலட்சம் பேர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த சூழலில் குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டமே இல்லையென்று ஏன் டமாரமடிக்கிறீர்கள் ?

9) உங்கள் அரசின் கீழ் காண்ட்ராக்ட் வேலையில் நியமிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ரூ.5,300 ? ஒரளவிற்கு படித்த, தன்மானமிக்க ஒருவரால் ரு.5,300-இல் வாழ முடியுமா ?

10) தரமான கல்வியை தருவது ஒரு அரசின் பொறுப்பு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா ? கடந்த சில நாட்களில் குஜராத்தின் சிறுநகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நாங்கள் போயிருக்கிறோம். குஜராத் அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கின்றன. தலைமை ஆசிரியரோடு சேர்த்து, சில பள்ளிகளில் 600 மாணவர்களுக்கு வெறும் மூன்று ஆசிரியர்கள் தான் இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு மோசமான கல்வி சூழலை வைத்துக் கொண்டு, தேசத்தை எப்படி முன்னேற்றுவீர்கள் ?

11) நல்ல தரமான மருத்துவ வசதியை குடிமக்களுக்கு தருவது என்பதை ஒரு அரசின் கடமை என்பதை ஒத்துக் கொள்வீர்களா ? குஜராத் அரசின் மருத்துவ சேவைகள் சீரழிந்து இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஊழல் இருக்கிறது. பல கிராமங்களில், முதன்மை சுகாதார மையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அல்லது நாசமாகிக் கொண்டிருக்கின்றன. தாலுகா, மாவட்ட அளவில் இருக்கும் மருத்துவமனைகளில், பாதிக்கும் மேற்பட்ட பொறுப்புகளில் ஆட்கள் இல்லை. காலியாக இருக்கிறது. பொறுப்பில் இருக்கும் ஆட்களும் வருவதில்லை. மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் இல்லை. இந்த லட்சணத்தில் குஜராத் அரசின் மருத்துவ சேவை இந்தியாவிலேயே பிரமாதம் என்று ஏன் பொய் சொல்கிறீர்கள் ?

12) விவசாயிகள் குஜராத் முழுக்க உங்களுடைய ஆட்சியின் மீது கடுப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு செலவழிப்பதை விட குறைவாக தான் உங்களின் குறைந்த பட்ச விலை இருக்கிறது. அவர்களை உங்களுடைய அரசு முழுமையாக புறக்கணிக்கிறது. விவசாயிகள் இந்த அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாயத்திற்கு அளிக்கப்பட்ட மானியங்களை ரத்து செய்ததால், கடந்த சில வருடங்களில் 800 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

13) நாடு முழுக்க நீங்கள் போகுமிடங்களெல்லாம் குஜராத் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு சென்றிருக்கிறேன் என்று டமாரம் அடிக்கிறீர்கள். எங்களுடைய ஆய்வில், நான்கு இலட்சம் விவசாயிகள் மின்சார இணைப்புக்கு உங்களுடைய அரசில் விண்ணப்பித்து, இது வரை கிடைக்காமல் இருக்கிறார்கள். உங்கள் விவசாயிகளுக்கே ஒழுங்காய் மின்சார இணைப்பு தரமுடியாத போது, ஏன் கிராமங்கள் தோறும் மின்சார்ம என்கிற முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறீர்கள் ?

14) உங்களுடைய அரசில் விவசாயிகளின் நிலங்கள் பலவந்தமாக பிடுங்கப்பட்டு, உங்களுக்கு தோதான பெறு நிறுவன முதலாளிகளுக்கு சல்லிசான விலையில் வழங்கப்படுகின்றன. இதிலும் பல விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கூட போய் சேரவில்லை. சந்தை மதிப்பை விட குறைவான இழப்பீட்டு தொகையை தான் பெரும்பாலான விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறது உங்களுடைய அரசு. நிலங்களை பிடுங்கி, அதானிக்கும், அம்பானிக்கு ஒரே ஒரு ரூபாய்/சதுர மீட்டர் என்கிற அளவில் தாராளமாய் வழங்கியிருக்கிறது உங்களுடைய அரசு. ஏன் ? ஏன் உங்களின் அரசு விவசாயிகளிடத்தில் இதயமில்லாமல் நடந்து கொள்கிறது ?

15) கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்காக குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் 2005-இல் நர்மதா அணையின் உயரத்தினை உயர்த்தினீர்கள். எட்டு வருடங்களாகியும், கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு தண்ணீர் இல்லை. இந்த தண்ணீர், உங்களின் அரவணைப்பில் இருக்கும் தொழிலதிபர்களுக்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது. ஏன் கட்ச் மக்களுக்கும் உங்களுக்கும் பாராமுகமாக இருக்கிறது ?

16) பஞ்சாப்பில் நீங்கள் பேசும் போது, கட்ச்-சில் இருக்கும் பஞ்சாபியர்களின் நிலத்தை அரசு ஒரு போதும் ஆக்ரமிக்காது என்று சொன்னீர்கள். உண்மை என்னவென்றால், உங்களுடைய அரசு, நீதிமன்றத்தில் இந்த நிலங்களை கையகப்படுத்த வழக்கு தொடர்ந்திருக்கிறது. நீங்கள் வழக்கினை வாபஸ் பெறுவீர்களா ?

17) நீங்கள் தனியார் ஜெட்டுகளிலும், ஹெலிகாப்டர்களிலும் பயணிக்கிறீர்கள். இதை போல எத்தனை ஹெலிகாப்டர்கள்/ஜெட்கள் உங்களிடத்தில் இருக்கின்றன ? யாருக்கு சொந்தமானவை இவை ? இதை பயன்படுத்த எவ்வளவு செலவு செய்கிறீர்கள் ? அல்லது யார் இந்த செலவினை உங்களுக்காக ஏற்கிறார்கள் ? ஏன் உங்களின் விமான செலவு திட்டங்களை பொதுவில் வைக்கக் கூடாது ?

1 comment: